Tuesday, April 21, 2009

சொல்லாமல் மறைத்த ஒன்றினால், இரண்டு கொலைகள் மற்றும் ஒரு தற்கொலை..


தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்..
அதற்கு முன்பாக
உன்னைக் கொலை செய்யத்
திட்டமிட்டிருக்கிறேன்..
உன்னிடமிருந்து
இதுநாள்வரை மறைத்திருந்த
அதை சொல்லிவிடவே எண்ணினேன்;
அல்லது ஒரு கடைசிக் கடிதமாக அதை எழுதி
உனக்குத் தெரியப்படுத்தவும் விரும்பினேன்..
ஒரு வேளை
உன்னிடம் அதை பகிர்ந்துவிடும் பட்சத்தில்
இந்தக் கொலை மற்றும் தற்கொலைக்கான
முன்காரணம் ஏதும்
இல்லாமற் போய்விடும் என்பதால்
அதை உனக்குத் தெரியப்படுத்தாமல்
உன்னைக் கொலை செய்யவும்
பின்பு தற்கொலை செய்து கொள்ளவும்
விரும்புகிறேன்..

21.04.2009

Saturday, April 18, 2009

?

நேற்று
உன்னை
கடைசியாக சந்திக்கநேர்ந்தது.
அது
இழப்பா
அல்லது விடுதலையா?

17.04.2009

Thursday, April 16, 2009

தமிழ்ப் பின்நவீனத்துவமும்; ரமேஷ் பிரேமும்; பேச்சும் மறுபேச்சும்

இந்த பதிவுலகத்தில் அதிகமாக உபயோகபடுத்தப்படும் வார்த்தைகள் இரண்டு. 1.ரிப்பீட்டேய் ; 2.பின்நவீனத்துவம்
சில இழப்புகளின் பதிலீடாக தமிழ்ப் பதிவுலகம் பக்கம் வந்த எனக்கு, இந்த பின்நவீனத்துவம் என்கிற வார்த்தை முதலில் மிரட்சியை தந்தாலும், பின்பு, இது இன்னொரு வித தேடலை உருவாக்கும் என்று நம்ப துவங்கினேன். அதே நேரத்தில் பெரிய பசங்க சிலரின் எழுத்தின் சுவாரஸ்யம் காரணமாக, சில புத்தங்களின் அறிமுகம் கிடைத்தது. சமீபத்தில் புத்தக கண்காட்சியில் சில புத்தகங்களை வாங்க நேர்ந்தது. நகுலன் மற்றும் சாருவின் ஒரு நாவலை இருபது பக்கங்கள் கூட தாண்டமுடியாமல் வைத்துவிட்டேன்.. குருவி தலையில பனங்காயாகிவிட்டது.

அப்போது வாசிக்க துவங்கிய இரு கட்டுரை புத்தகங்கள்தாம் ரமேஷ்-பிரேமின் கட்டுரையும் கட்டுக்கதையும் மற்றும் பேச்சு-மறுபேச்சு.. நல்ல புத்தகங்கள். நிச்சயம் ஒரு பெரிய வாசிப்புக்கு தயார்படுத்தும். இந்த பதிவில் பேச்சு மறுபேச்சு புத்தகத்தில் இருக்கும் ஒரு கட்டுரையின் சில பத்திகளை பதிவிடலாம் என்று எண்ணுகிறேன்.

மேற்கின் பின்நவீனத்துவம் : பின்நவீனத்துவம் என்பது மேற்கின் தத்துவ, அரசியல், அழகியல் மரபுகளை மாற்று, உப தத்துவ, அழகியல், தத்துவ மரபுகளின் மூலம் கேள்விக்குட்படுத்தி, உள்வெளியாக ஆராய்ந்து, மாற்றுப் பார்வைகளை முன்வைத்த ஒரு தொகுப்பறிவு முறை. இதில் அறம் என்பதும், மற்றவற்றிக்கான இடம் என்பதும் முக்கிய இடம்வகிப்பவை. அதே சமயம் இது ஒற்றைத் தன்மை உடையதல்ல. பேரழிவை நிகழ்த்திய இரண்டு உலகப் போர்களைக் கண்டு ஃபாசசிம், ஸ்டாலிசம் என்ற போக்குகளால் தாக்கப்பட்ட ஐரோப்பிய அறிவுத்துறையினரும், கலைஞர்களும் அவர்களது தத்துவ மதிப்பீடுகளைக் கேள்விக்குட்படுத்திய போது, பின்நவீனத்துவ நிலையைக் கண்டடைந்தனர். மேற்குலகின் வரலாறு, இறையியல், அரசியல், அறவியல் அனைத்தையும் மறுக்கவும், மறுபொருளாக்கம் செய்யவும் இக்காலம் பயன்பட்டது. எப்பொழுது நவீனத்துவமும், அறிவியக்கமும் தோன்றியதோ, அப்பொழுதே பின்நவீனத்திற்க்கான அடிப்படைக் கேள்விகளும் அங்கு உருவாகிவிட்டன. விமர்சன பார்வையும், அதிகார மறுப்பும் இதன் அடிப்படைகளாக அமைந்தவை. ஒற்றை மூலமும், ஒற்றை முடிவும் இல்லை என்று வேறுபாடுகளின், வித்தியாசங்களின் இருப்பை அங்கீகரித்து, அவற்றின் அழகைக் கொண்டாடுதல் இதன் முக்கியக் கூறு. மேற்கே மேற்கை சிதைவாக்கம் செய்துகொள்ளும் காலமே மேற்கின் பின்நவீனத்துவ இயக்கம் அல்லது போக்கு.

தமிழ்ப் பின்நவீனத்துவம் : ஆனால் இந்திய தமிழ்ச் சூழலில் பின்நவீனத்துவம் என்பது வேறுபட்டது. வேறுபட்டு இருக்க வேண்டியது. தமிழில் நீண்ட மரபுடைய தத்துவ ஆய்வு நவீனத்தளத்தில் முறையாக விவாதிக்கப்படவில்லை. முடிவுகள் மட்டுமே இங்கு வைக்கப்படுகின்றன. அவற்றை கண்டடையும் வழிகள் மறைக்கப்படுகின்றன. இதனால் தமிழ் பின்நவீனத்துவம் என்பது இன்னும் ஆய்ந்தறிய வேண்டிய நிலையிலேயே உள்ளது.
தமிழ்ப் பின்நவீனத்துவம் பற்றி ஆய்வு செய்யும் யாருக்கும், தமிழ் வரலாறு, தமிழின் மாற்று வரலாறு, தமிழ் உப மரபுகள், மாற்று சிந்தனைகள், இலக்கியப் பன்மை மரபுகள் பற்றிய அடிப்படையான மரபும், அக்கறையும் தேவை. தமிழிலக்கியத்தையும், இலக்கிய கோட்பாடுகளையும், தமிழிலுள்ள ஆயிரக்கணக்கான கதையாடல் வடிவங்களையும் முழுமையான நுண் வாசிப்பிலும், மறுவாசிப்பிலும் அணுகிய பிறகே, தமிழில் பின்நவீனத்துவம் பற்றியும் தமிழ்ப் பின்நவீனத்துவம் பற்றியும் நாம் பேச முடியும்.

பின்நவீனத்துவ வாசிப்பு : பின்நவீனத்துவ நாவல் என்றோ, பின்நவீனத்துவ சிறுகதை என்றோ உலகில் எங்கும் எதுவும் இல்லை. பின்நவீனத்துவ வாசிப்பு மட்டுமே. Nouveau Roman, Meta Fiction நாவல், Hyper Reality நாவல், Sur-Fiction, Palimpsest History நாவல், Magical Realism நாவல், Ethnographic நாவல், Mythographic நாவல் என ஒவ்வொரு நாவலாசிரியரும், தமக்குகந்த அடையாளம் தந்து, தமது நாவல்களை உருவாக்குகிறார்கள். இவை அனைத்தையும் பின் நவீனத்துவ கால எழுத்துக்கள் என்று விமர்சகர்கள் குறிப்பிட்டு, பின்நவீனத்துவ வாசிப்புக்கு உட்படுத்துகிறார்கள். ஏனெனில் பழைய முறையிலான வாசிப்பு, எதையும் மேலோட்டமாக வாசித்து, ஒற்றை முடிவை, ஒற்றை மையத்தைக் கூறிவிடும். ஆனால், பின்நவீனத்துவ வாசிப்பு பலவகையாக பிரதியை அணுகி, அதன் பல தளங்களில் பயணப்பட்டு, அதுவும் ஒரு படைப்பு போல தன்னை வடிவமைத்து கொள்ளும். அதனால், பின்நவீனத்துவ வாசிப்பு, பின்நவீனத்துவ விமர்சனம், பின்நவீனத்துவ ஆய்வு போன்றவை மட்டும்தான் உண்டே தவிர, பின்நவீனத்துவ நாவல் என்று எதுவும் கிடையாது. அது மட்டும் அல்ல. பின்நவீனத்துவ வாசிப்பு, பின்நவீன காலப் பிரதிகளை மட்டும்தான் இப்படி பொறுப்புடன் ஆழமாக பன்முகத் தன்மையுடன் வாசிக்கும் என்பதல்ல; ஒரு வேத நூலையும், ஒரு மொழியில் முதன்முதலில் எழுதப்பட்ட புராணத்தையும் கூட சிரத்தையாக வாசிக்கும்.

தமிழில் எல்லாவிதமான கதையாடல்களும் வரவேண்டும். எதார்த்தவாத, இயற்கையியல்வாத, வெளிப்பாட்டிய வாத, மனப்பதிவு வாத, நினைவோட்ட உத்தியுள்ள, புராணத் தன்மையுள்ள, தொன்மத் தன்மையுள்ள, சித்தர் நடையுடைய, சொல்கதை மரபுள்ள, ஆவணப் படுத்தல் உத்தியுள்ள, வரலாற்று வாய்மொழி மரபுள்ள....... என நூற்றுக்கணக்கான கதையாடல்கள் பல்கிப் பெருகவேண்டும். இவற்றை பொறுப்புடன் வாசிப்பதுதான், வாசித்து அவற்றின் பன்முகத் தன்மையை பல தள அர்த்தத்தை வெளிப்படுத்துவதுதான் தமிழில் பின்நவீனத்துவத்தின் வேலை. இதில் பின்நவீனத்துவ உப்பு இல்லை. பின்நவீனத்துவ காரம் இல்லை என்று சொல்வது அரசியல் ஆதிக்கக் கதையாடல். இலக்கியத்திற்கும் இதற்கும் சம்பந்தம் கிடையாது.

தமிழ் வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள் : தமிழில் சங்க இயக்கியங்கள் தொடங்கி, இன்றைய சிறுகதைகள் வரை, உலக இலக்கியங்களுக்கு ஈடு செய்யும் ஏராளமான படைப்புகள் உள்ளன. அளவிலும் கூட, தமிழிலக்கியம் பெரும் பரப்பை உடையது. இவற்றை பலவகை சிந்தனை முறைகளை பின்னணியில் நுணுகி வாசித்து, உலக இலக்கியத் தளத்துடன் உரையாடலைத் தொடங்கவும், வளர்க்கவும் பின்நவீனத்துவப் பார்வையும், வாசிப்பும் மேலும் வழி அமைத்துத் தருகிறது. சிரத்தையுடன் அதைப் பயின்று, புதியன படைக்க வேண்டியது தமிழ்ச் சமூகத்தின் அறிவுத் தளமும் இயக்கமும் அழிந்து போகாமல் காப்பதற்கான காலத்தின் தேவை.

வாசகா; வாசகி : ஒரு நாவல் எழுதுவதென்பது எளிதான வேலை அல்ல. கடுமையான உழைப்பைக் கோருகிற விஷயம் அது. பன்முகப்பட்ட வாசிப்பும் பயிற்சியும் அதற்கு தேவை. என்பதனால் வாசிப்பு என்பதற்கும், பன்முகப்பட்ட வாசிப்பும் பயிற்சியும் உழைப்பும் தேவை.

-- தீராநதி டிசம்பர் 2003


புத்தகம் : பேச்சு - மறுபேச்சு (பின்நவீனத்துவம் நோக்கி)
எழுதியவர் : ரமேஷ்-பிரேம்
பதிப்பகம் : மருதா
விலை : Rs.150

நெற்றி பொட்டில் அடித்தாற்போல் இதுதான் பின்நவீனத்துவம் என்று சொல்வது அல்ல இக்கட்டுரை. மாறாக ஒரு எளிய வழியில் பின்நவீனத்துவம் பற்றிய பேச்சை ஆரம்பித்து வைக்கிறது.

தொடர்புடைய சுட்டிகள் : அய்யனாரின் இந்த பதிவு. இந்த பதிவுக்குள் சில சுட்டிகள் இருக்கும், அதை தொடரவும்.

Nouveau Roman, Meta Fiction, Hyper Reality, Sur-Fiction, Palimpsest History, Magical Realism, Ethnographic, Mythographic & etc - இந்தக் கூறுகளை அல்லது வகைகளை யாராவது விளக்கமாக எழுதியிருக்கிறார்களா அல்லது எழுத முன்வருவார்களா... உதவியாக இருக்கும்.. எனக்கு தெரிந்து, அனுஜன்யா, Magical Realism பற்றி கொஞ்சம் எழுதி இருக்கிறார்.

மேலும், இந்த கட்டுரையை வாசிப்போர்கள் பின்னூட்டத்தில் உங்கள் கருத்துக்களையோ சொல்லவோ, தொடர்புடைய சுட்டிகளை தெரியப்படுத்தவோ அல்லது சந்தேகங்களை கேட்கவோ கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
வளர்மதியோ, அய்யனாரோ, சுந்தரோ, ஜமாலனோ, பைத்தியக்காரனோ, டிசே தமிழனோ, நாகார்ஜுனனோ மேலும் வலையில் இயங்கும் அத்தனை பெரிய தலைகளும், நமக்கு உதவுவார்கள் என்று நம்புகிறேன்.

அடுத்தபதிவில் ரமேஷ்-பிரேமின் கொலை மற்றும் தற்கொலை பற்றி மற்றும் சக்கரவாளக் கோட்டம் கவிதைத் தொகுதிகள் பற்றி..
இந்தக்கட்டுரை பலரை சென்றடைய வேண்டுமென்று நான் ஆசைப்படுவதால், தமிழ்மணம், தமிழிஷ் வோட்டு போடவும்.. :)

Tuesday, April 14, 2009

வெறும் சொற்கள்..


காலத்தை தின்று வாழும் பறவைகள்

அறையின்
சுவர்க்கடிகாரத்திலிருந்து
நொடிநொடியாய்
விழுந்துகொண்டிருக்கிறது காலம்..
கீழே
சில பறவைகள் மேய்ந்து கொண்டிருக்கின்றன..

17.03.2009

--OOO--

நெய்தல் நிலத்து பறவையொன்று

நெய்தல் நிலத்து பறவையொன்று
பறந்தபடி
வெகுநேரமாய் என்னை
அவதானித்துக்கொண்டிருக்கிறது.
நான்
அலைகளின் மீது
தப்பித்தலுக்கான ஒத்திகையில் இருக்கிறேன்..

17.03.2009

--OOO--

சொற்களும் நானும்

சொற்கள்
சிக்கலானவை..
மனதின் நிகழ்வுகளை
சொற்களை கொண்டு பிரதியெடுக்க
முயற்சிக்கும் போதெல்லாம்
ஏதேதோ சொற்கள்
முளைக்கின்றன மொழியறிவின் கட்டுக்குள்..
உள்ளுக்குள் உருவாகும்
சொற்களை
அதன் போக்கில் விட்டுவிட்டால்
சொற்கள் எப்படி எப்படியோ உருமாறி
கடைசியில் அர்த்தமற்று போய்விடுகின்றன..
இறுதியில்
எப்போதும் போல்
தனித்து எச்சமாகிறேன்...
சொற்களற்ற பிரதியாகிறேன் நான்..

05.01.2009

--OOO--
குறிப்பு : இப்போதெல்லாம் எதுவும் விருப்பதிற்குரியதாய் இல்லை..

Friday, April 10, 2009

வட்டத்திற்குள் பெண்.. [தொடர் பதிவு]

அண்ணன் எம்.எம்.அப்துல்லா, இந்த தொடர் பதிவிற்கு அழைத்திருந்தார்.. நானும் எழுத வேண்டும் என்று நினைத்து நினைத்து, நாட்கள் கடக்கிறது.. எனக்கு இது ஒரு கடினமான தொடர் பதிவு.. இந்த தலைப்பில் எனக்கு உடன்பாடு கூட இல்லை..

அதிலும் தலைப்புக்குள் எதையும் எழுதவும் தெரியாதெனக்கு..

உன்னிடமிருந்து
விலகி ஓட
எத்தனித்து எத்தனித்து
உன் வட்டங்களுக்குள்ளேயே
விழுந்து
வீழ்கிறேன்..
நீ ஒரு புதைக்குழி.

இப்படி ஒரு காதல் தோல்வி கவிதையை தான் எழுதமுடிகிறது.. வேறு எழுதலாம் என்று நினைத்தபோது, எதை எழுதவேண்டுமென்று கூட எனக்கு தெரியவில்லை.. பெண்களின் பார்வையில், இந்த தலைப்பை பற்றி சிந்தித்து (?!) எழுதலாம் என்று நினைத்தபோது, பெண்களின் பார்வை சிக்கவில்லை.. :)

வட்டத்திற்குள் பெண்.. என் வாசிப்பு வட்டத்திற்குள் இருக்கும், இங்கு வலைத்தளத்தில் எழுதும் நிறைய பெண்களில், எனக்கு பிடித்த பெண் கவிஞர் ஒருவரின் கவிதையை இங்கு பதிவிடலாம் என்று எண்ணுகிறேன்.. பிடித்த கவிதாயினி ஒருவரை இப்பதிவை தொடர அழைக்கலாம் என்று எண்ணுகிறேன்..

அனிதா.. இவரின் கவிதைகளை நீங்கள் படித்திருக்கக்கூடும்.. அவ்ளோ அழகா எழுதுவாங்க.. சமீபத்தில் (மார்ச் முதல் தேதி) ஒரு அழகிய பெண் மகவை பெற்றிருக்கிறார்கள்.. மேலும் அவர்களின் கவிதை தொகுதி, உயிர்மை பதிப்பகம் மூலம் புத்தகமாக வந்து இருக்கிறது.. இந்த இரட்டிப்பு மகிழ்ச்சியை இந்த பதிவில் எழுதி இருக்கிறார்கள்.. அவருக்கு இந்தப் பதிவின் மூலமும், என் அன்பும் வாழ்த்துக்களும்..

அவரின் சில கவிதைகள் இதோ..
கற்பு...

இரவு நேர பேருந்து பயணத்தின்
அரை உறக்கத்தினூடே...
ரகசியமாய் இடை வருடும்
பின் இருக்கை மிருகம்...

காமமும் கோபமும்
ஒருசேர கிளர்ந்தெழ,

வருடலின் சுகம் மீறியும்
"பளாரென" அறைகிறேன்...

என் வருகையை
எதிர்நோக்கி
தலையணை கட்டித்தூங்கும்-

கணவன் முகம் நினைத்து...

--OOO--

அடிமைகளை உருவாக்குவது எப்படி

மிக எளிது.
ஒரு புன்னகையில் துவங்கி
நட்பு, பிரியம் என மெல்ல, மிக மெல்ல
முன்னேறவும்.
உனக்கென நான் (மட்டுமே) இருக்கிறேனென
புரிதல் உண்டாக்கவேண்டும்

ஆரத்தழுவிக்கொள்ளலாம்
காமம் இல்லாமலும்
பின் காமத்தோடும்.

என்னைப் பிரிந்தால்
விஷப்பாம்புகளுக்கு இரையாவாய் என்றும்
எச்சில் இலைகளிலிருந்து
உணவு உண்ண நேரும் என்றும்
எச்சரித்தபடியிருப்பது உசிதம்

எண்ணற்ற முத்தங்கள்
நேரம் காலம் பார்க்காமல் தரவேண்டும்
பெறவேண்டும்.

வெளிர் நீல வானில்
பறவைகள் பறப்பதைக் காட்டுவது
சுதந்திரமாய் இருப்பதாய் நினைத்துக்கொள்ள உதவும்.

ஆயிற்று.
வருடத்திற்கோர் அடிமையை சுலபமாய் உருவாக்கலாம்

மிகக் கவனம்...
அடிமைகள் உங்களைப்பற்றி
பேசிக்கொள்ளாமல் பார்த்துக்கொள்ளவும்

--OOO--

அன்பின் விலைகள்

எதற்காகவோ கண் கலங்கியபடி
ஆட்டோவில் ஏறினேன்.

சத்தமின்றி விம்மத் துவங்கி
பின் உடைந்து பெரிதாய் அழவும்
ஆட்டோக்காரன் திரும்பிப்பார்த்துத் தயங்கி
அழாதீங்க என்றான்.

என் இடம் வந்ததும்
கொடுத்த இருபது ரூபாய்க்கு எட்டு ரூபாய் சில்லரை
எண்ணி கொடுத்துவிட்டு சென்றுவிட்டான்.

அந்த மீதி சில்லரையாவது வாங்காமல் விட்டிருக்கலாம்.

--OOO--

கதவு

கதவுகள் சூழ்ந்த அறையின் இருள் நீக்கி
பாதி திறந்திருக்கிறது ஒரு கதவு.

மயக்கம் தெளிந்தும்
கட்டப்பட்ட கைகளின் இறுக்கம் தளர்த்துவது
அத்தனை எளிதாய் இல்லை.

பாதி திறந்த கதவு வழி
உள்ளே வருகின்றன
பரிச்சயமற்ற குரல்கள்
தொடர்ந்து வீசுகிறது சாராய வாடை
எப்பொழுதுக்குமான இயலாமையில் அழைக்கின்றன
பிரியத்தின் குரல்கள்
அவ்வப்போது வரும் காற்று
தப்பித்தலுக்கான ஏக்கங்களை கூட்டிப்போகிறது

பாதி திறந்த கதவுகள் சுவாரஸ்யமானவை.
அவ்வளவே.

மூடிய கதவுகள் மூடியே இருக்கின்றன
எப்பொழுதுக்குமான உண்மைகளுடன்.

--OOO--

கவிதைகள் எப்படி இருக்கு?? அவங்களோட அனேகக் கவிதைகள் எனக்கு பிடித்தமானவை.. இந்த கவிதைகளெல்லாம் ஒரு அடையாளம் மட்டுமே.. அவங்க வலைத்தளம் சென்று அனைத்து கவிதைகளையும் படிக்கவும்.. அவ்ளோ அழகான கவிதைகள்..

சரி.. இந்த தொடர்ப்பதிவிற்க்கு நான் யாரை அழைக்க போகிறேன் என்பதை நீங்கள் அறிந்திருக்கக்கூடும்.. வேறு யார்.. கவிதாயினி ஸ்ரீமதி தான்.. ஏற்கனவே காணாமல் போன கனவுகள்! என்ற கவிதை தான், அவங்கள இந்த தொடர்பதிவுக்கு அழைக்க தூண்டியது.. [ஸ்ரீ, நீ கேட்கக்கூடும்.. "எங்கடா அந்த வழக்கொழிந்த சொற்களுக்கான தொடர் பதிவு" என்று.. அதற்கான வார்த்தைகளை நான் தேடிக்கொண்டிருக்கிறேன்.. கிடைத்ததும் எழுதுகிறேன்.. :)]

10.04.2009

Monday, April 6, 2009

கவிதை பரவும் வெளியின் வரைபடம்..


உடலுக்குள்
கவிதை பரவும் வெளியின்
வரைபடம் தயாரிக்க திட்டமிட்டேன்..
ஒரு பெரிய வரைபட தாளும்,
பென்சிலும் எடுத்துக்கொண்டு,
ஏற்கனவே வாங்கி
பதப்படுத்தி வைத்திருந்த மனித உடலொன்றின்
வாய் வழி,
குப்பிகளில் வைத்திருந்த
பழையக் கவிதைகளை
ஒன்றொன்றாக செலுத்தி
கவிதை உடலுக்குள் பரவிய வெளியை
குறிப்பெடுக்கத் துவங்கினேன்..
சரியாக பதினேழாவதுக் குப்பியில் இருந்த
கவிதையை செலுத்திய போது
அவ்வுடல்
சிறகு கொண்ட பூனையாக மாற துவங்கியது..
பதினெட்டாவதுக் குப்பிக் கவிதையை
செலுத்துகையில்
கண்ணிமைக்கும் கணத்தில்
என்னையும்
மிச்சமிருந்த கவிதைக்குப்பிகளையும்
எடுத்து விழுங்கிவிட்டு
நெட்டி முறித்து
பறந்தது..

31.03.2009

  ©Template by Dicas Blogger.

TOPO