Monday, March 30, 2009

வீண் விரயங்கள்...


இன்று மாலை
வழக்கத்தை விட
அதிகமாகவே கோபித்து சண்டையிட்டான்..
அவன் இன்னும்
அதை மறக்கவில்லையென்றும்
நான் செய்தது பெரும் துரோகமென்றும்
வாதிட்டான்..
சில பொய்களை சொல்லி
அதிகமாகவே சரக்கு வாங்கி கொடுத்து
ஒருவாறாக சமாளித்து
அவனையும் அழைத்துக்கொண்டு
நடு இரவில்
வீடு திரும்புகையில்
யாருமில்லா சுரங்கப்பாதையில்
அவன் கழுத்தை இறுக்கிக் கொலைசெய்தேன்..
கடந்த முறை
அவன் சண்டையிட்டபோதே
கொன்றிருந்தால்
சில பொய்களையும்
சரக்கிற்கான காசையும் தவிர்த்திருக்கலாம்
என்றெண்ணியபடியே வீட்டுக்கு ரயிலேறினேன்..

27.03.2008

Monday, March 23, 2009

ரயில் செய்யும் இயந்திரவியல்..


ரயிலொன்றினை வடிவமைக்கும்
இயந்திரவியல் நுட்பம்
தெரியுமெனக்கு.
ரயில் செய்யும் இயந்திரங்கள்தான் இல்லை.
என்றாலும்
வார்த்தைகளால்
ரயில் செய்யமுடியுமென்ற
நம்பிக்கைமட்டும் இருந்தது.
பலவாறாக முயன்று
வார்த்தைகளான ரயிலொன்றினை
செய்துமுடித்தேன்.
பின்பு
தண்டவாளமும்
சில ரயில் நிலையங்களும் இருக்கும்
இக்கவிதையை தேர்ந்தெடுத்து
வார்த்தைகளாலான ரயிலை ஓட்டி
பரிசோதிக்கிறேன்..
நீங்கள் இப்போது
இந்த ரயிலில் பயணித்துக்கொண்டிருக்கிறீர்கள்..

21.03.2009

Monday, March 16, 2009

பூனையாகுதல்...


அவன் போய்விட்டபின்பு
சுற்றும் முற்றும்
யாரும் இல்லையென்பதையும் உறுதிபடுத்திவிட்டு
அவன் எழுதிய கவிதைக்குள்
எட்டிப்பார்த்தேன்..
அது ஒரு காதல் கவிதை..
வழக்கமான
சில மரங்களும்
அவற்றின் பூக்களும்
பறவைகளும்
பச்சைப் புல்வெளிகளும்
தூரத்தில் ஒரு பெரிய கடலும் கொண்டிருந்த
அக்கவிதையில்
கூடவே சில "அன்பே", "அழகே"
வார்த்தைகளுக்கு மத்தியில்
அவன் காதலி தனியாய் அமர்ந்திருந்தாள்..
நான்
அவன் முகம் போன்றதொரு
முகமூடியோடு
அக்கவிதைக்குள் இறங்கி நடக்க ஆரம்பித்தேன்
அவளை நோக்கி..

13.03.2009

Sunday, March 8, 2009

தெரிந்துகொள்ள வேண்டாத ஒருவன் வசிக்கும் கவிதை.. [அ] முன்பின் தெரியாதவனை கொலை செய்தல்..


நீங்கள்
தெரிந்து கொள்ள வேண்டாத ஒருவன்
வசிக்கும் இக்கவிதையை
இப்போது வாசிக்க துவங்கிவிட்டீர்கள்..
தன்னை தெரிந்துகொள்பவர்களை
பின்தொடரும்
மந்திரசக்தி கொண்ட அவன்
இந்த நேரத்திற்க்கெல்லாம்
அரூபமாய் உங்கள் அருகில் நின்றபடி
உங்களோடு இதை வாசித்து கொண்டிருப்பான்..
இனி எப்போதும்
உங்களை பின்தொடர்ந்தும் கண்காணித்தும்
உங்கள் தன்னிலையை உடைக்க முயலும்
அரூபனிடமிருந்து தப்பிக்க
உங்களுக்கு ஒரு வழி மட்டுமே இருக்கிறது..
புனைவுகளையும்
நம்பிக்கைகளையும் மட்டுமே
தின்று வாழ்கிற அரூபனையும்,
இக்கவிதையின் வார்த்தைகளையும்,
நம்பாமல்
நிராகரிக்கும் பட்சத்தில்
அடுத்த சில நொடிகளிலேயே
உங்களால் உணவு மறுக்கப்பட்டு
கொடும்பசியில் இறந்து போவான்..
அதாவது
இப்போது நீங்கள்
ஒரு கொலை செய்தாகவேண்டியிருக்கிறது
உங்களை காப்பாற்றிக்கொள்ள..

06.03.2009

Tuesday, March 3, 2009

காத்திருப்புகள்..


உன்
நேசங்களுக்கான
என் காத்திருப்புகளை
சுடும் பாலை மணலில்
இரைக்காக
ஒளிந்து கிடக்கும் விஷப்பாம்பின்
காத்திருப்புகளாகக் கருதாதே..
அது
துளி மழைக்காக
காத்திருக்கும்
பாறையிடுக்குத் தேரையின்
காத்திருப்பையொத்தது..
என்றாலும்
உன் கருத்தியலை உண்மையென்றும்
என் வார்த்தைகளை பொய்யென்றும்
கொள்ள
உரிமையுண்டு உனக்கு.

03.03.2009

  ©Template by Dicas Blogger.

TOPO