Wednesday, October 28, 2009

மழையில் பெய்த பூனைகள் (அ) கலைந்து போனக் கவிதைகள்..


எப்போதோ
கவிதைகளால் நிரப்பி வைத்திருந்த
நோட்டுப்புத்தகமொன்றின்
எதிரெதிர் பக்கங்களில் இருந்த
மழையைப் பற்றியக் கவிதையும்
பூனைகளைப் பற்றியக் கவிதையும்
ஒட்டி கலந்திருந்தது..
அக்கவிதையில்
தற்போது பெய்து கொண்டிருக்கும்
பின் மாலை பெருமழையில்
அதிசயமாய் பூனைகள் விழ துவங்கின..
பேரதிசயமாய் அவற்றில் சில
உயிரோடுமிருந்தன..
பயமும்
அதிர்ச்சியும்
பாதுகாப்பின்மையும் ஒரு சேர
மியாவ் மியாவ் மியாவ் மியாவ்..

சிறுது நேரத்திலேயே
இயல்பு நிலை திரும்பி
அவற்றுள் தத்தம் துணைகளைத்
தேடத் துவங்கினப் பூனைகள்..
இதுதான் சரியான சந்தர்ப்பமென்று
இக்கவிதைக்கு மறுபுற பக்கத்துக் கவிதையில்
வாழ்ந்துக்கொண்டிருக்கும்
'மாயவன்'
ஒரு பூனையாய் உருமாறி
தனக்கானத் துணைப்பூனையை தேடத்துவங்கினான்
இக்கவிதைக்குள் ஊடுருவி..

28.10.2009
Raining Animals

Wednesday, September 30, 2009

கனவில் வந்துகொண்டிருக்கிற பாம்பு (அ) பாம்பொன்றின் சுவை..


கடந்த இருபத்தி மூன்று நாட்களாக
பறக்கும் பாம்பு ஒன்று
கனவில் வந்து கொண்டிருக்கிறது
இறக்கைகள் ஏதுமின்றி
தரையில் ஊர்வதை போலவே
வானில் பறக்கிறது (ஊர்கிறது) அது
எனை தீண்டும் வன்மம்
அதன் கண்களில் இருப்பதாய் தோன்றுகிறது
பயந்து ஓடுகிறேன்
பின் மூச்சிரைத்து வீழ்கிறேன்
தரை இறங்கி வந்து
என் நாவை
அதன் நாவால் தீண்டிவிட்டி போகிறது
அந்த சுவை எனை கிறங்க வைக்கிறது
மயக்கம் கரையும் வேளையில்
எழுந்து பெரும் கூச்சலிட்டபடி
காடுகளுக்குள் ஓடி மறைகிறேன்

30.09.2009

Tuesday, August 25, 2009

And, Now... (அ) மாய உலகில் வாழ்தல்..


எப்போதோ
என்னிடம் வந்து சேர்ந்திருந்தது அது.
encyclopedia கண்டிராத உருவமுடைய
அது எது என்பது கூட தெரியாமலேயே
வளர்க்க துவங்கினேன்.
என்பதனால்
அதற்கு நான் பெயரும் வைத்திருக்கவில்லை.
எதை உண்ணக் கொடுத்தாலும்
என்னை மட்டும் சாப்பிட்டுவிட்டு
அறையின் மூலையில்
உறங்க துவங்கும்.
மாயக்கனவுகளால் நிறைந்திருந்தது வாழ்க்கை.

காரணங்கள் உதித்திராத
ஒரு தினத்தில்
அது என்னை விட்டு அகன்றது.
இப்போதெல்லாம் நானே
என்னை தின்று கொள்கிறேன்..

25.08.2009


பின்குறிப்பு : இந்த And, Now பதிவு எழுதவில்லை என்றால் பதிவர் சங்கத்தில் இருந்து விலக்கி வைக்கப்படுவார்கள் என்பதை அறிந்தேன். என்பதானால் ஓடோடி வந்து இங்கு நானும் 'பதிவர்' என்பதை உறுதி செய்கிறேன்.. அப்பாலிக்கா மீட் பண்ணுவோமா.. :)

ஆரம்பிச்சு வச்ச நல்லவங்க : சந்தனமுல்லை, ஆயில்ஸ், நிஜம்ஸ், தமிழ் பிரியன், ஜமால், நான் ஆதவன், தமிழன் கறுப்பி, ஸ்ரீமதி, முத்து லட்சுமி, கானா பிரபா, சின்ன அம்மிணி.. ஸ்ஸப்பா.. இப்பவே கண்ண கட்டுதே..

.

Friday, July 24, 2009

சொற்களினால் கொலைகளை நிகழ்த்துதல் (அ) சொல் விளையாட்டு (Cross Word)


உன்னை நான்
கொலை செய்யாமலிருக்க
ஒரே ஒரு காரணம் சொல்
ஒரே சொல்லில்
உன் காரணத்தை சொல்
ஒரு சொல் உன்னை காப்பாற்றக்கூடும்
அது எந்த சொல்

நீ வேறொரு சொல்லை கொண்டு
என்னை பதிலுக்கு
கொலை செய்ய முடியும்
உன்னிடத்தில் இருக்கிறதா அந்த சொல்*

அச்சொல்லினால் நீ என்னை
கொலை செய்யும் பட்சத்தில்
நான் தற்கொலை செய்து கொண்டதாகவே
கருதுவேன்

21.07.2009


* உனக்கு தெரியாமலேயே உன்னிடத்தில் இருக்கிறது அந்த சொல்

Tuesday, July 21, 2009

டியூப் லைட்..


மாலை விழுந்து
இரவெழும் நேரத்தில்
இந்த நீண்ட ரயில் நடைமேடையின்
அனைத்து டியூப் லைட்டுகளும்
துவக்கப்பட்டன
பல டியூப் லைட்டுகள்
சட்டென்று எரிய துவங்கின
சில டியூப் லைட்டுகள் கொஞ்ச நேரம் துடித்து
பின் எரிய துவங்கின
என் தலைக்கு மேல் இருந்த ஒன்று மட்டும்
எரியாமல் துடித்து கொண்டே இருந்தது
எரிகிற டியூப் லைட்டுகள்
நடைமேடையின் ஏனைய மனிதர்களையும்
என் தலைக்கு மேலிருக்கும் எரியாத டியூப் லைட்
என்னையும் பிரதிபலிக்கிறதோ
என்று ஏதேதோ எண்ணங்கள்
பயமாய் திரிய துவங்க
எரிகிற டியூப் லைட்டொன்றின் கீழ் சென்று
நின்று கொண்டேன்
யாரும் கவனிக்கும் முன்பு

21.07.2009

பிற சேர்க்கை 1 : கடந்த வாரயிறுதியில் தோழி ஒருத்தியுடன் பேசி கொண்டிருந்தபோது, கடைசியாக அவள் சொன்னது "சரியான டியூப் லைட்டுடா நீ "

பிற சேர்க்கை 2 : இன்று காலை எனது அறையின் டியூப் லைட் பழுதாகிபோனது.

பிற சேர்க்கை 3 : SAW (I) படத்தின் முதல் காட்சி டியூப் லைட் ஒளிர துவங்குவதில் இருந்து துவங்குகிறது.

Monday, June 29, 2009

குரல்களால் தீர்மானிக்கப்படுகிறவன் (அ) கொலைக்கு சாக்கு போக்கு சொல்லுதல்..


உன்னை கொலை செய்ய
விரும்பவில்லை.
ஆனால்
ஏதேதோ என்னை தூண்டுகிறது
உன்னை மட்டும் கொலை செய்ய.
காதலியை கொலைசெய்வது
பரமசுகம் என்கிறது உள்ளுக்குள்
ஒரு குரல்.
அவள் பிரிந்து சென்ற
நம்பிக்கை துரோகத்துக்கு
பழிவாங்க வேண்டுமென்கிறது
ஒரு குரல்.
உனக்கு கிடைக்காதவள்
வேறு எவனுக்கும் கிடைக்ககூடாதென்கிறது
ஒரு குரல்.
அவளை கொலை செய்துவிட்டு
நீயும் தற்கொலை செய்துகொள் என்கிறது
ஒரு குரல்.
குரல்களால் தீர்மானிக்கப்படுகிறேன்
நான்.

12.02.2009

  • ரொம்ப நாள் முன்னாடி எழுதி draft-ல் இருந்தது.. வேறு எதுவும் புதுசா எழுதவில்லை என்பதனால் இதை publish பண்ணிட்டேன்.. :)

Thursday, June 18, 2009

மழைக்கால கொடுங்கனவு..


மழைக்கால இரவுகளில்
நெடுஞ்சாலைகளில்
சீறிப்பாயும் வாகனங்களில்
நசுங்கிச் சாகும்
தவளைகளும் நத்தைகளும் சிறுஆமைகளும்
ஆவியாய் வந்து
என் கனவுகளில்
என்னை வேட்டையாட துவங்கும்
என்கிற பயத்தினாலேயே
மழைக்கால இரவுகளையெல்லாம்
விளக்குகளை அணைத்துவிட்ட
அறையின் மூலையில்
தூங்காமல் அமர்ந்தபடி கழிக்கிறேன்..
எனினும் பயமாயிருக்கிறது.
18.06.2009


வேண்டுகோள் : நான் சிறுகதையெல்லாம் எழுதினது இல்லை. எழுதவும் தெரியல.. ஏற்கனவே ஆதி அண்ணா எப்படி சிறு கதை எழுதறதுன்னு பதிவு போட்டு சொன்னாரு.. அதைவிட சிம்பிளா ("சிறுகதை for Dummies", "சிறுகதை writing in 24 hrs, in a week, in 10 days", மாதிரி), யாராச்சும் சொல்லிட்டு போனா புண்ணியமா போகும்.. இன்னும் பத்து நாள்தான் இருக்கு..

  ©Template by Dicas Blogger.

TOPO